சங்க காலம் வரலாறு



சங்க காலம்
 
"வரலாற்றின் உயிர்நாடி, காலக் கணிப்பாகும். இன்ன ஆண்டில், இன்ன திங்களில், இன்ன நாளில் இன்னது நிகழ்ந்தது என்று கூறுதல் வரலாற்றின் இலக்கணமாகும். பண்டையத் தமிழக வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்குக் காலங்கணித்தல் எளிதாகத் தோன்றவில்லை. மன்னர்களைத் தம் பாடல்களில் குறிப்பிடும் பழந்தமிழ்ப் புலவர்கள் அம்மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தைத் தெரிவிப்பதில்லை. அவர்களுடைய செய்யுள்களில் விளக்கப்படும் சில நிகழ்ச்சிகளைக் காலங்கணிக்கப்பட்ட வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்புறுத்தி அவற்றில் காலத்தை ஒருவாறு அறுதியிட வேண்டியதுள்ளது" என வரலாற்றுப்    பேராசிரியர்   கே.கே.பிள்ளை குறிப்பிடுகின்றார்.    எனவே,    புறச்சான்றுகளைவிட, அகச்சான்றுகளையே அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுக்க வேண்டியுள்ளது. அகச்சான்றுகள் பெரும்பாலும் இலக்கியங்களாகவே உள்ளன.  அவ்விலக்கியங்கள் தரும் சான்றுகளிலிருந்து தமிழகத்தின் வரலாற்றுக்கு உட்பட்ட காலம் சங்ககாலம் என்பது பெறப்படுகிறது. இக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் பாண்டியன், சோழன், சேரன் என்ற முப்பெரும் மன்னர் அரசாண்டு வந்தனர். பாண்டியரின் தலைநகரம் மதுரை; சோழர்களின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினமும்(புகார்) உறையூரும் ஆகும். சேரனின் தலைநகரம் வஞ்சி. 
 
சங்ககால மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாராட்டிப் பரிசில் வழங்கிப் புரந்து வந்தனர். சங்ககால மன்னர்கள் எழுப்பிய எழிலோங்கு அரண்மனைகள், மாளிகைகள், கோயில்கள், அங்காடிகள், துறைமுகங்கள், அவர்கள் ஓட்டிய நாவாய்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. ஆனால் அவர்கள் காலத்துப் புலவர்கள் பாடிய பாடல்கள்  -  மன்னர்களது அருமைகளையும்,  பெருமைகளையும், பண்புகளையும் பறைசாற்றும் பாடல்கள் இப்போதும் எஞ்சி நிற்கின்றன. அந்தப் பாடல்களே சங்ககாலத் தமிழகத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்துகின்றன. தமிழர்களின் அக, புற வாழ்வு ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல் பாடல்கள், வணிகம், ஓவியம் சிற்பம் கட்டடம் போன்ற கலைகள் ஆகிய எல்லாவற்றையும் சங்கப் பாடல்களே சான்றாக நின்று விளக்குகின்றன.  

சங்கம் எனும் சொல் 

'சங்கம்' என்னும் சொல் (புலவர் கூட்டம்  என்ற   பொருளில்) சங்க இலக்கியம் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை. அது  தமிழ்ச் சொல்லா,  வடமொழிச்  சொல்லா  என்ற  வாதங்களும்   உண்டு. சங்கம்  என்னும்  சொல்  பிற்காலத்திய ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில்  ஐயமில்லை.   இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கூடல், அவை, மன்றம் போன்றவை ஆகும். அவை முன்பு வழக்கிலிருந்தன. சொற்கள் மறைவதும் மாறுவதும்,  புதிதாகத் தோன்றுவதும் ஒவ்வொரு மொழியிலும் நிகழக்கூடியது. எனவே தொடக்க காலத்தில் 'சங்கம்' என்ற சொல் கையாளப் படாமையால், சங்கம் என்ற அமைப்பு இருந்திருக்க இயலாது என்பார் கூற்று உண்மைக்குப் புறம்பான ஒன்று.  ஆகவே,  பண்டைத் தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தலை, இடை, கடை என்று மூன்று சங்கங்கள் அமைத்து, அவற்றின் வாயிலாகத் தமிழ் வளர்த்தார்கள் என்று கூறும் மரபைப் புறக்கணித்துவிட முடியாது. 

சங்க காலம்
தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன. பாண்டிய மன்னர்களின் ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. தென்மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும், முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும், இச்சங்தத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து போயின. மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர். ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும் ஒருசிலவே எஞ்சியுள்ளன. இந்த இலக்கியங்கள் சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியத்தொகுப்பில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இடம் பெற்றுள்ளன. காலத்தால் தொன்மை பெற்றதான தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இது ஒரு இலக்கண நூல் என்றாலும், சங்க கால அரசியல், சமூக பொருளாதார நிலைமைகளைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. எட்டுத் தொகை என்பது ஐந்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற எட்டு நூல்களின் தொகுப்பாகும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து நூல்கள் உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அகம், புறம் என்ற இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினெண்கீழ்கணக்கில் அறத்தையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் பதினெட்டு நூல்கள் உள்ளன. அவற்றில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாகும். இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும், சீத்தலைச்சாத்தனார் இயற்றிய மணிமேகலையும் சங்க கால சமூகம் மற்றும் அரசியல் குறித்த தகவல்களைத் தருகின்றன.

பிற சான்றுகள்

சங்க இலக்கியங்களைத் தவிர, கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, டாலமி, மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ ஆகியோர் தென்னிந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிய வர்த்தகத் தொடர்புகளை குறிப்பிட்டுள்ளனர். மெளரியப் பேரரசுக்கு தெற்கேயிருந்த சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்கள் பற்றி அசோகரது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கலிங்கத்துக் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டும் தமிழ்நாட்டு அரசுகளைப் பற்றி குறிப்பிடுகிறது. அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல் போன்ற இடங்களில் மேற்கொள்ளபட்ட அகழ்வாய்வுகளும் தமிழர்களின் வாணிப நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியத்தின் காலம்

சங்க இலக்கியத்தின் காலவரையறை பற்றி அறிஞர்களுக்கிடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு, சேர அரசன் செங்குட்டுவன் இருவரும் சமகாலத்தவர் என்ற செய்தி சங்க காலத்தை நிர்ணயிப்பதற்கு அடிப்படையாகத் திகழ்கிறது. இச்செய்தியை சிலப்பதிகாரம், தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இலக்கியம், தொல்லியல், நாணயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்ற முடிவுக்கு வரலாம்.

அரசியல் வரலாறு

சங்க கால தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் ஆட்சி புரிந்தனர். இலக்கிய குறிப்புகளிலிருந்து இந்த மரபுகளின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

சேரர்கள்

தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர்.

சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். செய்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற்கொண்ட இமாலயப் படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான். தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான். கோயில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர்.

சோழர்கள்

தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது. சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால் சோழன். அவனது இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள், பாண்டியர்கள், பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தான். இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தான். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவன் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்பு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கரிகாலன் அமைத்தான். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான்.

பாண்டியர்கள்

தற்காலத்திய தெற்குத் தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. நெடியோன், பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற விடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும், பாண்டிய நாட்டின் சமூக – பொருளாதார நிலைமைகளை குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

குறுநில மன்னர்கள்

சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் முக்கிய பங்காற்றினர். பாரி, காரி, ஓரி, நல்லி, பேகன், ஆய், அதியமான் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சேர, சோழ, பாண்டி ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.

சங்க கால அரசியல்

சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தான். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப் பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி, சேரர்களுக்கு வில், அம்பு. அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர் – அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. ஒவ்டிவாரு ஆட்சியாளரும் நிரந்தரப் படையையும், தத்தமக்குரிய கொடிமரத்தையும் கொண்டிருந்தனர்.

அரசின் முக்கிய வருவாய் நிலவரி. அயல்நாட்டு வாணிகத்தின் மீது சுங்கமும் வசூலிக்கப்பட்டடது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்கு முக்கிய வருவாயகத் திகழ்ந்தது. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்கை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இரவும் பகலும் அவை கண்காணிக்கப்பட்டன.

சங்க கால சமூகம்

ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

- குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த பகுதி

- முல்லை, மேய்ச்சல் காடுகள்

- மருதம், வேளாண் நிலங்கள்

- நெய்தல், கடற்கரைப் பகுதி

- பாலை, வறண்ட பூமி

இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர்.

1. குறிஞ்சி – முதன்மைக் கடவுள் முருகன் (தொழில்: வேட்டையாடுதல், தேன் எடுத்தல்)

2. முல்லை – முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு) (தொழில்: ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி)

3. மருதம் – முதன்மைக்கடவுள் – இந்திரன் ( தொழில்: வேளாண்மை)

4. நெய்தல் – முதன்மைக்கடவுள் – வருணன் (தொழில்: மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி)

5. பாலை – முதன்மைக் கடவுள் – கொற்றவை (தொழில்: கொள்ளையடித்தல்)

நான்கு வகை சாதிகள் – அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் – குறித்து தொல்காப்பியம் கூறுகிறது. ஆளும் வர்க்கத்தினர் அரசர் என்றழைக்பட்டனர். சங்க கால அரசியல் மற்றும் சமய வாழ்க்கையில் அந்தணர் முக்கிய பங்கு வகித்தனர். வணிகர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டனர். வேளாளர்கள் பயிர்த் தொழில் செய்தனர். பழங்குடி இனத்தவர்களான பரதவர், பாணர், எயினர், கடம்பர், மறவர், புலையர் போன்றோரும் சங்க கால சமுதாயத்தில் அங்கம் வகித்தனர். பண்டையக்கால தொல்பழங்குடிகளான தோடர்கள், இருளர்கள், நாகர்கள், வேடர்கள் போன்றோரும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.

சமயம்

சங்க காலத்தின் முதன்மைக் கடவுள் முருகன் அல்லது சேயோன் தமிழ்க்கடவுள் என அவர் போற்றப்பட்டார். முருக வழிபாடு தொன்மை வாய்ந்தது. முருகன் தொடர்பான விழாக்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுபடை வீடுகள் அவனுக்கே உரித்தானவை. மாயோன் (விஷ்ணு), வேந்தன் (இந்திரன்), வருணன், கொற்றவை போன்ற கடவுள்களையும் சங்க காலத்தில் வழிபட்டனர். வீரக்கல் அல்லது நடுகல் வழிபாடு சங்க காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. போர்க்களத்தில் வீரனது ஆற்றலையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அனவது நினைவாக வீரக்கல் நடப்பட்டடது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மறைந்த வீரர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய வீரக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீத்தோர் வழிபாடு மிகவும் தொன்மையானதாகும்.

மகளிர் நிலை

சங்க காலத்தில் மகளிர் நிலை குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவ்வையார், நச்செள்ளையார், காக்கைபாடினியார் போன்ற பெண் புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகளிரின் வீரம் குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கற்பு பெண்களின் தலையாய விழுமியமாகப் போற்றப்பட்டது. காதல் திருமணம் சாதாரணமாக வழக்கத்திலிருந்தது. பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். இருப்பினும், கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் ‘சதி’ என்ற உடன்கட்டையேறும் வழக்கம் பின்பற்றப்பட்டது. அரசர்களும், உயர்குடியினரும் நாட்டிய மகளிரை ஆதரித்துப் போற்றினர்.

நுண்கலைகள்

கவிதை, இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கின. அரசர்கள், குறுநில மன்னர்கள், உயர்குடியினர் போன்றோர் புலவர்களுக்கு தாராளமாக பரிசுப் பொருட்களை வழங்கி ஆதரித்தனர். பாணர், விறலியர் போன்ற நாடோடிப் பாடகர்கள் அரசவைகளை மொய்த்த வண்ணம் இருந்தனர். நாட்டுப்புற பாடல்களிலும் நாட்டுப்புற நடனங்களிலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தனர். இசையும் நடனமும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. சங்க இலங்கியங்களில் பல்வேறு வகையிலான யாழ்களும் முரசுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணிகையர் நடனத்தில் சிறந்து விளங்கினர். ‘கூத்து’ மக்களின் சிறந்த பொழுதுபோக்காக திகழ்ந்தது.

சங்க காலப் பொருளாதாரம்

வேளாண்மை முக்கியத் தொழில் ஆகும். நெல் முக்கியப் பயிர் கேழ்வரகு, கரும்பு, பருத்தி, மிளகு, இஞ்சி, மஞ்சள், இலவங்கம், பல்வேறு பழவகைகள் போன்றவையும் பயிரிடப்பட்டன. பலா, மிளகு இரண்டுக்கும் சேர நாடு புகழ் பெற்றதாகும். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் நெல் முக்கிய பயிராகும்.

சங்க காலத்தில் கைத்தொழில்கள் ஏற்றம் பெற்றிருந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சுவேலை, கப்பல் கட்டுதல், மணிகள், விலையுயர்ந்த கற்கள், தந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்தல் போன்றவை ஒருசில கைத்தொழில்களாகும். இத்தகைய பொருட்களுக்கு நல்ல தேவைகள் இருந்தன. ஏனென்றால் சங்ககாலத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. பருத்தி மற்றும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன. நீராவியைவிடவும், பாம்பின் தோலைவிடவும் மெலிதான துணிகள் நெய்யப்பட்டடதாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டடது.

உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் சங்க கால்தில் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்கள், கிரேக்க – ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தருகின்றன. வண்டிகளிலும் விலங்குகள் மேல் ஏற்றப்பட்ட பொதிகளின் மூலமாகவும், வணிகர்கள் பொருட்களை கொண்டுசென்று விற்பனை செய்தனர். உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையின் அடிப்படையிலேயே நடைபெற்றது.

தென்னிந்தியாவிற்கும், கிரேக்க அரசுகளுக்கும் இடையே அயல்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது. ரோமானியப் பேரரசு தோன்றிய பிறகு ரோமாபுரியுடனான வாணிபம் சிறப்படைந்தது. துறைமுகப்பட்டினமான புகார் அயல்நாட்டு வணிகர்களின் வர்த்தகமையமாகத் திகழ்நததது. விலை மதிப்பு மிக்க பொருட்களை ஏற்றிவந்த பெரிய கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வந்து சென்றன. தொண்டி, முசிறி, கொற்கை, அரிக்கமேடு, மரக்காணம் போன்றவை பிற சுறுசுறுப்பான துறைமுகங்களாகும். அயல்நாட்டு வாணிபம் குறித்து ‘பெரிப்புளூஸ்’ நூலின் ஆசிரியர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார். அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ போன்ற ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளியாலான நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன. சங்க காலத்தில் நடைபெற்ற வாணிகத்தின் அளவு மற்றும் தமிழ்நாட்டில் ரோமானிய வணிகர்களின் செயல்பாடுகள் ஆிகயவற்றை இவை வெளிப்படுத்துவதாக உள்ளன. பருத்தியாடைகள், மிளகு, இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், மஞ்சள் போன்ற நறுமணப் பொருட்கள், தந்தவேலைப்பாடு நிறைந்த பொருட்கள், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்றவை சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டட பொருட்களாகும். தங்கம், குதிரைகள், இனிப்பான மதுவகைகள் ஆகியன முக்கிய இறக்குமதிகளாகும்.

சங்க காலத்தின் முடிவு

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் மெல்ல முடிவுக்கு வரத் தொடங்கியது. சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். களப்பிரர்கள் ஆட்சிகுறித்து நமக்கு சொற்ப தகவல்களே கிடைக்கின்றன. இக்காலத்தில் புத்த சமயமும், சமண சமயமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பின்னர் களப்பிரர்களை விரட்டிவிட்டு வடக்கு தமிழ்நாட்டில் பல்லவர்களும், தெற்குத் தமிழ்நாட்டில் பாண்டியர்களும் தத்தம் ஆட்சியை நிறுவினர்.

முற்கால வரலாறு
பண்டைய தமிழ்நாட்டில், வேந்தர் என அழைக்கப்பட்ட அரசர்களின் தலைமையின் கீழ் இருந்த மூன்று முடியாட்சி மாநிலங்களும் வேள் அல்லது வேளிர் என்ற பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட பல பழங்குடி இனத் தலைவர்களின் தலைமையில் இருந்த பழங்குடி இனக் குழுக்களும் இருந்தன.இவர்களுக்கும் அடுத்ததாக, உள்ளூர் பகுதிகளின் இனக் குழுக்களின் தலைவர்கள் இருந்தனர், இவர்கள் கிழார் அல்லது மன்னர் என அழைக்கப்பட்டனர்.கி.மு மூன்றாம் நூற்றாண்டின் போது தக்காணப் பீடபூமி மௌரியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. கி.மு முதல் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை இந்த பகுதி சாதவாகனர் வம்சத்தினரால் ஆட்சி செய்யப்பட்டது. வடக்கு பகுதியைச் சேர்ந்த இந்தப் பேரரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ் பகுதி தன்னிச்சையாக இருந்தது. தமிழ் அரசர்கள் மற்றும் குழுத்தலைவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்கள் சண்டையிடுவது இடங்களுக்காகவே. அரசனின் நீதிமன்றங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக சமூக நிகழ்வுகளுக்கான மையங்களாக இருந்தன. அவை வளங்களைப் பகிர்ந்தளிக்கும் மையங்களாக இருந்தன. ஆட்சியாளர்கள் படிப்படியாக வட இந்தியார்களின் ஆதிக்கம் மற்றும் வேதக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இவைகள் ஆட்சியாளரின் நிலையை மேம்படுத்த பலி கொடுக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்தன.

அசோகப் பேரரசின் கீழ் இல்லாத பேரரசுகள் மற்றும் இந்தப் பேரரசுடன் நட்பு நிலையில் இருந்த பேரரசுகள் பற்றிய விவரங்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்ந்து சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்களின் வம்சங்கள் (கி.மு 273-232) அசோகத் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழ் பேரரசுகளின் கூட்டமைப்பின் கதிகும்பா கல்வெட்டில், சுமார் கி.மு 150 ஆம் ஆண்டு கலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அரசன் கார்வேலா (Kharavela) பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முற்கால சோழர்களில் கரிகாலச் சோழன் மிகப் பிரபலமாக இருந்தார். சங்க இலக்கியங்களின் பல்வேறு செய்யுள்களில் கரிகாலச் சோழன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.பின்னாளில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நூலில் வரும் பல்வேறு கதைகளிலும் கரிகாலன் பற்றிய செய்திகள் முக்கிய பொருளாக இருந்தது. மேலும் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளிலும் கரிகாலன் பற்றிய தகவல்கள் உள்ளன. இமாலயம் வரையிலான இந்தியா முழுவதையும் வென்றவன் எனவும் நிலமானியங்களைக் கொண்டு காவேரி ஆற்றின் வெள்ளத்தை தடுப்பதற்காக கரைகளைக் கட்டியவன் எனவும் இந்த நூல்கள் விளக்குகின்றன. சங்க இலக்கியங்களில் இந்த தகவல்கள் இல்லை என்பதால் இந்த புராணம் பற்றி வெளிப்படையாக தெரிவதில்லை. சோழர்களில் மற்றொரு பிரபலமான மன்னன் கோச்செங்கண்ணன் ஆவான். சங்க கால இலக்கியப் பாடல்கள் பலவற்றில் அவனைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இடைக்காலத்தின் போது சைவத் ஞானியாகவும் கருதப்பட்டார்.

இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப் பகுதியான கொற்கையிலிருந்து முதலில் ஆட்சி செய்ய தொடங்கிய பாண்டியர்கள் பின்னாளில் மதுரை நகருக்கு மாறினர். சங்க இலக்கியத்திலும் பாண்டியர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே காலத்தில் இருந்த கிரேக்க மற்றும் ரோமானிய ஆவணங்களிலும் பாண்டியர்கள் பற்றி உள்ளது. மெகஸ்தனிஸ் (Megasthenes), இந்திகா (Indika) என்ற தனது நூலில் பாண்டியப் பேரரசு பற்றி குறிப்பிட்டுள்ளார். மதுரையின் தற்போதைய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவின் சில பகுதிகளை பாண்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாண்டியர்கள் கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பையும் கொண்டிருந்தனர். பாண்டியர்கள் தமிழகத்தின் மற்ற பேரரசுகளுடன் இணைந்து ஈழத்தின் தமிழ் வணிகர்களுடன் வியாபார மற்றும் திருமணத் தொடர்பையும் கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்களின் பல்வேறு பாடல்களில் பாண்டிய மன்னர்கள் பலர் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களில் 'தலையாலங்கானம் வென்ற' நெடுஞ்செழியன் மற்றும் தியாகச் செயல்களுக்கான சிறப்பான ஒருவராக குறிப்பிடப்படும் ஆரான் முதுகுடுமி பெருவழுதி என்ற மற்றொரு நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற தமிழ்நூல்களின் தொகுப்புகளில் உள்ள சிறிய பாடல்கள், மதுரைக் காஞ்சி மற்றும் நெடுநல்வாடை போன்ற இரண்டு முக்கிய நூல்களிலும் (பத்துப்பாட்டு தொகுப்புகளில் உள்ளது) சங்க காலத்தில் பாண்டிய பேரரசில் மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் வணிக ரீதியான செயல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டின் முடிவில் களப்பிரர்களின் ஊடுருவல் காரணமாக முற்காலப் பாண்டியர்களின் புகழ் மறைந்து போனது.

தென்னிந்தியாவின் மலபார் கடற்கரை அல்லது அதன் மேற்கு பகுதியுடன் இணைந்த, தற்போதைய கேரள மாநிலம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக சேரர்களின் பேரரசு இருந்தது. கடல் வழியாக ஆப்பிரிக்காவுடன் வாணிகம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் இருப்பிடம் இருந்தது இந்தியாவின் மாநிலமான கேரளாவில் உள்ள இன்றைய மக்கள், பண்டையக் காலத்தில் தங்கள் பகுதியை ஆட்சி செய்த சேரர்கள் பேசிய மொழியே பேசுகின்றனர். மேலும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடனும் இவர்கள் பரவலான தொடர்பு கொண்டிருந்தனர். இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வரை மட்டுமே வழக்கத்தில் இருந்தது, இதன் பிறகு தமிழ் மொழியில் சமசுகிரதத்தின் தாக்கம் காரணமாக மொழியின் தனிப்பட்ட அங்கீகாரம் மாறி புதிய மொழி ஒன்று பயன்பாட்டிற்கு வந்தது.

பழமையான இலக்கியங்கள் தமிழில் வளர்வதற்கு இந்த முற்கால பேரரசுகள் ஆதரவளித்தன. சங்க இலக்கியம் என்று அறியப்படும் செவ்வியல் இலக்கியம் கி.மு 200 முதல் 300 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.சங்க இலக்கியத்திலுள்ள பாடல்கள் பெரும்பாலும் உணர்வு மற்றும் பொருள் சார்ந்த தலைப்புகளையே கொண்டுள்ளன. இடைக்காலத்தில் இவைகள் வகைப்படுத்தப்பட்டு பல்வேறு தொகை நூல்களாக திரட்டப்பட்டுள்ளன. செழுமையான நிலம் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் குழுக்கள் பற்றியே இந்த சங்கப் பாடல்கள் சித்தரிக்கின்றன. இந்த பகுதிகளை ஆட்சி செய்வது பரம்பரை குடியாட்சி முறையில் இருந்தது. எனினும் இந்த பகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஆட்சி செய்பவரின் அதிகாரம் ஆகியவை முன்பே இயற்றப்பட்ட ஒழுங்குமுறைகளை (தர்மம் ) பின்பற்றியே இருந்தது.மக்கள் தங்களின் அரசரிடம் மிகவும் விசுவாசமாக இருந்தனர். உலகம் சுற்றும் புலவர்களும் இசைக்கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தாராள மனமுடைய அரசனின் அவைகளை அலங்கரித்தனர். இசை மற்றும் நடனக் கலைகள் மேம்பட்டு பிரபலமாக இருந்தன. சங்ககாலப் பாடல்களில் பல்வேறு வகையான இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தன. தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதி நடனங்களை ஒருங்கிணைத்து புதிய வகை நடனம் ஆடுவது இந்த காலத்தில் தான் தொடங்கியது. இந்த வகை நடனங்கள் இதிகாசமான சிலப்பதிகாரத்தில் முழுமையாக வெளிப்பட்டு இருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்தது. தொல்லியல் துறை ஆய்வுகள் மற்றும் இலக்கியங்களில் யுவனர்களுடனான (கிரேக்கர்) வெளிநாட்டு வியாபாரம் செழுமையாக இருந்தததைக் கூறுகின்றன. தென்னிந்தாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த முசிறி மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் துறைமுக நகரம் பூம்புகார் ஆகிய இரு இடங்களில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டு வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வியாபார மையங்களாக விளங்கின. இந்த வர்த்தகம் இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. மேலும் ரோமானிய அரசுக்கும் பண்டைய தமிழ் நாட்டிற்கும் இருந்த நேரடி உறவு அரபியர்கள் மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ஆக்சுமைட்களின் நேரடி வணிகத்தால் சிதைவுறத் தொடங்கியது. உள்நாட்டு வணிகம் சிறப்பாக இருந்தது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பது பண்டகமாற்று முறைப்படி நடந்தது. பெரும்பாலான மக்களுக்கும் அதிக நிலங்களைக் கொண்டிருந்த பரம்பரை விவசாயிகளான வெள்ளாளர்களுக்கும் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தது.

திருவள்ளுவர் காலம்:
அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.

திருக்குறள் காலம்:
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

திருவள்ளுவர்:
திருவள்ளுவரின் பிறப்பு முதலான வரலாற்றை அறுதியிட்டு கூற போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இவர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் இயற்றிய திருக்குறளின் அடிப்படையில் அவர் தாயார் பெயர் ஆதி என்றும், தந்தையார் பெயர் பகவன் என்றும் கூறுவோர் பலர் உள்ளனர். இவர் வாசுகி என்பவரை மணந்ததாகவும் சொல்லப்படுகிறது.                  இவர் உலகப் பொதுமறை என அனைவராலும் ஏற்கப்படும் விதத்தில் குறள் வெண்பாக்களால் ஆன செய்யுள்களை இயற்றினார். மொத்தம் ஆயிரத்து முன்னூற்று முப்பது பாடல்கள், நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நூல் திருக்குறள் என வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு தலைப்பில் அமைந்துள்ளது. அதிகாரத்திற்கு பத்து பாடல்கள் அமைந்துள்ளன.                  இவருக்கு சென்னை மைலாப்பூரில் வள்ளுவர் கோட்டம் என்னும் பெயரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்தியாவின் தென்முனையான குமரிக் கடலுள் நூற்று முப்பத்துமூன்று அடி உயத்தில் கல்லினாலான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

  திருவள்ளுவர் பிறந்த ஆண்டை 1921 ல் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறையினர் கண்டு பிடித்ததாக சொல்லப்படுகிறது. திருக்குறளை வள்ளுவர் தமிழில் எழுதவில்லை. திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார். 

கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம். 

இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால் குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து திரு குறள் என அழைத்தார்கள். மணக்குடவர் திருவள்ளுவர் காலத்தவராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் திருவள்ளுவரைப்பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

மணக்குடவர் எப்போதோ எழுதிய மூலத் தொகுப்பை கண்டு பிடித்து சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலில் அச்சில் ஏற்றியவர் தஞ்சையை சேர்ந்த ஞானப்பிரகாசன் என்பவர்.திருவள்ளுவர் யார் மணக்குடவர் யார் இவர்களிருவரும் எந்த இருப்பிடத்தில் எந்த காலத்தில் இருந்தவர்கள் திருவள்ளுவருக்கும் மணக்குடவருக்கும் இடைப்பட்ட தொடர்பு நட்பா அல்லது தொப்புள் கொடி உறவா என்பன பற்றிய விவரங்களை தஞ்சை ஞானப்பிரகாசன் முதன் முதலாக அச்சில் ஏற்றிய திருக்குறள் முன்னுரைகளில் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை. 

திருவள்ளுவர் பிறந்த ஆண்டை ஆராய்ந்து கண்டறிந்த பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறையினரும் இந்த அடிப்படை விவரங்களை குறிப்பிடவில்லை. காங்கிரஸிடமிருந்து தமிழக ஆட்சியை கைப்பற்றிய திராவிட கட்சி ஆட்சிகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றவராக இருந்த அறிஞர் அண்ணா துரை அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராக இருந்தவர் என்ற காரணத்தினால் 1971 ல் அரசு அலுவலகங்களில் கிறிஸ்து பிறந்த ஆண்டுக்கு போட்டியாக திருவள்ளுவர் பிறந்த ஆண்டும் பின்பற்றப்பட வேண்டு மென்ற ஆணையிட்டிருந்தும் 1981ல் புரட்சி தலைவர் ஆட்சியில் தான் முதன் முதலாக அரசு அலுவலகங்களிலும் நாட்காட்டிகளிலும் அது நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. 
பிறகு தமிழக பஞ்சாங்கங்களில் சேர்க்கப்பட்டது. 

தமிழ் என்ற வார்த்தை திருக்குறளில் இல்லாத போது அது தமிழினத்தை சார்ந்த நூலாக கருத முடியாது. இதனை தெரிந்தே அதனை உலக பொது மறை என மாற்றி விட்டார்கள் போலும். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இந்த உலக பொது மறை விளம்பரம் தமிழக ஆட்சியாளர்களிடமும் நாத்திக வாதிகளாக மாறிய தமிழ் புலவர்களிடமும் தமிழ் அறிஞர்களிடமும் சிக்கி படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. 

திருக்குறளில் வள்ளுவர் மனித வாழ்க்கையில் கடை பிடித்த அல்லது கடை பிடித்துதுணர்ந்த யதார்த்த உலக அனுபவ அல்லது பட்டறிவு கோட்பாடுகளை படித்தறிந்த 45 பேர்கள் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். திருக்குறளில் வட மொழி சொற்கள் விரவி எழுதப்பட்டுள்ளன. அதில் ஔ என்ற வார்த்தை இல்லை. 

திருக்குறளில் மூன்று ஒன்பது எண்களைத் தவிர மற்ற வரிசை எண்கள் 1 2 4 5 6 7 8 10 ஏராளமாக கையாளப்பட்டுள்ளன. கணித மேதை ராமனுஜம் கண்டு பிடித்த 1 முதல் 10 வரையுள்ள எண்கள் திருவள்ளுவர் காலத்திலோ அல்லது அவர் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மணக்குடவர் காலத்திலோ பயன் பாட்டில் இல்லை. அது சென்ற நூற்றாண்டு நிகழ்வு என்பதால் முதலில் திருக்குறளை அச்சில் ஏற்றிய தஞ்சை ஞானபிரகாசன் என்பவரே எண் வரிசைகளை அதில் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். 

திருக்குறளில் கூறப்பட்டுள்ள நல்ல செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதன் மூல கர்த்தாக்களின் முழு வரலாற்று விவரம் சரியான ஆதாரங்களுடன் தெரிய வில்லை. திருவள்ளுவர் பிறந்த ஆண்டை அரசு அலுவலகங்களில் பயன் படுத்த வேண்டு மென்று 1971ல் ஆணையிட்ட தமிழக அரசும் மேற்படி அடிப்படை ஆதாரங்களை முறையாக ஆய்ந்து மக்களிடம் வெளிப்படுத்த வில்லை. திருக்குறளில் கூறப்பட்டவைகள் அனைத்தும் உள்ளபடியே அப்படியே திருவள்ளுவர் கூறியது தானா என்பதை அவருக்குப் பின்னர் அதனை பல கால கட்டங்களில் பின்பற்றி எழுதியவர்கள் மொழி பெயர்த்தவர்கள் உரை எழுதியவர்கள் அச்சுக்கு கொண்டு சென்றவர்கள் எவரும் ஆராய்ந்து தெரிவிக்கவில்லை. அவர்கள் திருக்குறள் தமிழிலக்கண வரம்பிற்குட்பட்டதா என்பதையும் ஆராய்ந்து உரை நடை எழுதியதாக தெரியவில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர் அவர்களுக்கு தெரிந்த பல செய்திகளையும் சிறிது சிறிதாக உள்ளே நுழைத்து தொகுத்து திருக்குறளை உறுவாக்கி யிருக்க வேண்டும். 

திருக்குறள் மனிதவள மேம்பாட்டுக்கு தேவையான அறம் பொருள் காமம் என்ற மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை உணர்த்துவதுடன் அதில் உள்ள குறை நிறைகளை நிதானமாக சுட்டிக்காட்டி மனித இனத்தை திருத்த முற்படுவதால் மின்சாரம் ஆகாய விமானம் ரேடியோ போன்ற மனித வாழ்வு மேம்பாட்டுக்குத் தேவையான வெளிநாட்டவர்களின் கண்டு பிடிப்புகளைப் போன்று விஞ்ஞான அறிவியிலில் அக்கறையில்லாமல் தமிழக தெருக்கூத்துகளிலும் டிராமாக்களிலும் வட நாட்டு இதிகாசங்களையும் புராணங்களையும் மக்களிடம் பரப்பி விட்டுக் கொண்டிருந்த அப்போதைய தமிழினத்தவரில் ஞானப்பிரகாசன் போன்ற நல்லவர் ஒருவர் யாராலோ எழுதப்பட்டு யாராலோ தொகுக்கப்பட்டதனை அச்சில் ஏற்றி வெளி உலகுக்கு கொண்டு வந்து பின்னால் வரும் அரசியல் தலைவர்களுக்கு பேருதவி செய்துள்ளது மறக்க முடியாதது. 

அவருக்கும் ஒரு சிலை திருவள்ளுவர் சிலை அருகே அமைத்திருக்க வேண்டும். அவர் அச்சேற்றிய திருக்குறள் ஒரு நிரந்தர இலக்கிய நூலாகி திருவள்ளுவர் சிலைகளுடன் தமிழுலகில் தனித் தன்மையாக உலா வருவதும் உலக அந்தஸ்து பெற்று விட்டதும் தமிழுக்கு கிடைத்த பெருமை என்று சொல்லலாம்.

திருக்குறள் அரங்கேற்றம்:
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.
இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான். மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றிருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அதை எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை பொன்தாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம்.
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

திருக்குறள் உரை:
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது உரை. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்
1. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினெண் மேற்கணக்கு

2. பதினெண்கீழ்க்கணக்கு

3. ஐம்பெருங்காப்பியங்கள்

4. ஐஞ்சிறு காப்பியங்கள்

இவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

குறள் பெயர் வரலாறு:
திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார். கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம். இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால் குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து “திரு குறள்” என அழைத்தார்கள்
நூல் அமைப்பு:
"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.

திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்:
திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,
அறத்துப்பால்
பாயிரம்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்

பொருட்பால்
அரசியல்
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையியல்
நட்பியல்
குடியியல்

காமத்துப்பால்
களவியல்
கற்பியல்

திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல - 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் - 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்

நினைவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது . இந்த சிலையை வடிவமைத்தவர் , பிரபல சிற்பி , கணபதி ஸ்தபதி என்பவர்.

சென்னையில் வள்ளுவர் நினைவாக , வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி , கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.

லண்டன், ரஸ்ஸல் ஸ்கொயரிலுள்ள "ஸ்கூல் ஆ. .ப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்" என்னும் கல்வி நிறுவனத்தில் , வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே 
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- 
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு


என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

Comments

  1. Excellent. Very informative.

    ReplyDelete
  2. Your article is excellent. This is a lot of reading inside .. very awesome ... for educational information like this ..
    https://learningquickly.org

    ReplyDelete
  3. Very informative

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை