பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!!




பல்லாங்குழி விளையாட்டு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளிலும் இந்தோநேசியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளிளும் பரவலாக விளையாடப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் தூய தமிழ்ச் சொற்கள் அல்லது சில சம்ஸ்க்ருத சொற்களுடன் ஆடப்படும் இந்த ஆட்டம் எங்கே தோன்றியது என்று ஆராய்ந்தேன். தமிழ்நாட்டில்தான் இது பெரும்பாலும் தோன்றியிருக்க வேண்டும் பின்னர் தமிழர்கள் வணிகத்துக்காக சென்ற இடங்கள் எல்லாம் இதை எடுத்துச் சென்று பரப்பியிருக்கலாம். இவ்வாறு நம்புவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
1.நாம் இந்தோநேசியா, வியட்நாம், மலேசியா முதலிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தோம். பல்லவ கிரந்தம் என்னும் வட்டெழுத்துதான் தென்கிழக்காசிய நாடுகளின் எழுத்து வடிவங்களுக்கு மூலம். இதை
ஆகிய கட்டுரைகளில் ஏற்கனவே விளக்கிவிட்டேன். 2.இரண்டாவது காரணம் காசி, பசு, மூன்று விரை(விதை) ஆட்டம், ஆறு விரை ஆட்டம், சீதா பாண்டி, ராஜா பாண்டி, காசி பாண்டி முதலிய சொற்கள் அனைத்தும் தமிழ் அல்லது வடமொழிச் சொற்கள் ஆகும் 3. சீதை அசோகவனத்தில் ஆடிய ஆட்டம் என்பதே சீதாப் பாண்டி என்று மக்கள் நம்புவதாகும். இது இலங்கையிலும் பழங்காலம் முதலே இருக்கிறது. 4.எண்கள், கணக்கு விஷயத்தில் இந்தியர்கள் கண்ட முன்னேற்றத்தை உலகமே ஒப்புக் கொள்கிறது. செஸ் விளையாடு நம் நாட்டிலேயே தோன்றியது. பிதகோரஸ் தியரம், பை என்பன எல்லாம் இந்தியாவில் தோன்றியனவே. செஸ் தோன்றிய சுவையான கதையை “இந்தியா மீண்டும் உலக செஸ் சாம்பிய”னென்ற கட்டுரையில் கொடுத்துவிட்டேன். 5. தமிழ்நாட்டின் பழைய செப்பேட்டில் பல்லாங்குழி என்ற சொல் இருக்கிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நமக்குள்ள தொடர்பை அங்குள்ள 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகளும் காளிதாசர் முதலியோரின் குறிப்புகளும் காட்டுகின்றன. இந்தோநேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்லாங்குழியை சொங்கக் ,சுங்க என்று அழைக்கிறார்கள். இது சங்க்யா(எண்ணிக்கை) என்ற சம்ஸ்கிருத சொல்லின் திரிபாகும். தென் கிழக்காசிய நாடுகளின் சொற்களில் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் இருப்பது மொழியியல் நிபுணர்கள் அறிந்த விஷயமே.
செப்பேட்டில் பல்லாங்குழி
பல்லாங்குழி என்ற சொல் கி.பி 550-இல் பல்லவ மன்னன் சிம்மவர்மன் வெளியிட்ட பள்ளன்கோவில் செப்பேட்டில் காணப்படுகிறது. வஜ்ரநந்தி குரவர்க்கு பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்ட நிலத்துக்கு நாற்பால் எல்லைகளைச் சொல்லுகையில் கீழ்க்கண்ட வரி வருகின்றது:
“ வட பால் எல்லை பல்லாங்குழிக் காவின் தெற்கும்”
பல்லாங்குழிகள் நிறைந்த தோட்டம் அல்லது பல்லாங்குழி போல பல குண்டும் குழியும் நிறைந்த தோட்டம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். என்ன பொருளாக இருந்தாலும் பல்லாங்குழி என்ற சொல் அப்போதே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்.
இந்தியில் மங்கலா
இந்தி மொழியில் இந்த ஆட்டத்துக்கு மங்கலா என்று பெயர். இது அராபிய சொல் நகலா (நகர்த்தல்) என்பதில் இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் இது சரியில்லை என்றே தோன்றுகிறது. முதலில் நகலா என்பதே தமிழ் சொல் நகர்த்து என்பதுடன் தொடர்புடையது! இந்தியாவின் வடகோடி முதல் இலங்கையின் தென்கோடி வரை ராமாயண காலத்தில் இருந்து ஆடப்படும் (சீதாப் பாண்டி) ஆட்டம் எப்படி அராபிய நாட்டில் இருந்து வந்திருக்க முடியும்? மேலும் நகலா என்பதற்கும் மங்கலாவுக்கும் தொடர்பு மிகவும் குறைவு.
உண்மையில் அராபியர்கள் விஞ்ஞான விஷயங்கள் முழுதையும் நம்மிடம் கற்று மேலை உலகத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால்தான் இந்து எண்களை அராபிய எண்கள் என்று மேலை உலகம் கூறுகிறது. அல்பெருனி, இபின் படூடா போன்ற எழுத்தர்கள் இந்திய அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றி வியந்து போற்றி இருக்கிறார்கள்.
மங்கலா என்பது மங்களம் (சுபம்) என்ற சொல்லில் இருந்தே வந்திருக்க வேண்டும் இதை எதிர்ப்போர் நம் எல்லோருக்கும் வேறு ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். உலகம் முழுதும் 800 வகையான பல்லாங்குழி ஆட்டங்கள் இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது. இந்திக்காரர்களைத் தவிர மற்ற எல்லோரும் புதுப் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை நம்ப முடியாது. அப்படியானால் உண்மை என்ன? மண் கல என்பது மண் குழி என்பதன் திரிபாகவும் இருக்கலாம். பலர் மண்ணில் குழி செய்தும் விளையாடும் படங்கள் என்னிடம் உள்ளன.
இந்த விளையாட்டு தென் இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல இந்தோநேசியா மூலம் மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும் ஆப்பிரிக்க எல்லை நாடுகளுக்குள் நுழைந்திருக்கவேண்டும். ஆப்பிரிக்காவிலும் கிழக்குக் கரை அருகிலேயே இது பரவி இருப்பது நோக்கற்பாலது.
ஓவாரி, நானோவாரி ஆவாரி(அவாலி) என்ற ஆப்பிரிக்க பல்லாங்குழி ஆட்டப் பெயர்களில் உள்ள வாரி என்பது தமிழ் சொல்லாகும். வாரி எடுத்தல் அல்லது விரை=வாரி என்று மருவி இருக்கலாம். சிரியா, எகிப்து, லெபனான் நாடுகளில் கூட மங்கலா என்பது ஒரே ஆட்டத்தைக் குறிக்கவில்லை.
இந்தியர்களின் கணிதப் புலமை, செஸ் முதலிய ஆடங்களை உண்டாக்கிய பழமை, தென்கிழக்காசிய நாடுகளை 1300 ஆண்டுகளுக்கு ஆண்ட திறமை, பல்லாங்குழி ஆட்டச் சொற்களின் வளமை ஆகியவற்றைப் பார்க்கையில் நாம் இதை உலகுக்கு ஏற்றுமதி செய்தோமா அல்லது நாம் வேற்று நாட்டிலிருந்து இறக்குமதி செய்தோமா என்பதை வாசகர்களே உய்த்துணர்வது கடினமல்ல.
பல்லாங்குழி என்றால் என்ன?
“இது ஒரு விளையாட்டுப் பலகை. இதில் பக்கத்திற்கு ஏழாக இரண்டு பக்கத்திற்கு 14 குழிகளில் குழிக்கு ஐந்தாக 70 காய்களைக் கொண்டு ஒவ்வொரு குழியிலுள்ள காயை ஒவ்வொன்றாக எடுத்து இருவர் குழியிற் போட்டு ஆடுகையில் யாருடைய பக்கத்தில் காய்கள் எல்லாம் சேர்ந்துவிடுகின்றனவோ அவர்கள் வென்றவர்களாம். இது ஒரு வகை. இதிற் இன்னும் பலவகை யுண்டு” (பக்கம் 1052, அபிதான சிந்தாமணி)
பல்லாங்குழி ஆட்டத்தின் மூலம் மனக்கணக்கு, மனதைக் குவியப்படுத்தும் சக்தி, பொதுவாக கணக்கில் ஆர்வம் உண்டாகும்.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை